இலங்கையின்முருகைக் கற்பாறைகளின் அழிவும் அதைப் பாதுகாக்கும் வழிமுறைகளும்

By Fathima Eshqa

இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் எமது நாடான இலங்கை உயிர் பல்வகைமை மிக்க ஒரு பிரதேசமாகும்.மேலும் கடல் உயிர்க் கோளத்தின் ஒரு பகுதியாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசங்களில் பலவகைப்பட்ட முருகைக்கற்பாறைகளை தன்னகத்தே கொண்டுள்ளன.

முருகைக்கற்பாறைகள்/ பவளப்பாறைகள்/ பவளப் படுக்கைகள் (Coral Reefs) என்பது கடலுக்குள் காணப்படும் உயிரினங்களால் உருவாக்கப்படும் கட்டமைப்புகளாகும். இவை பெரும்பாலும் பவளப் பொலிப்களால் (Coral Polyps) உருவாக்கப்பட்டுள்ளன. இவை  கடற்கரைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பல கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழிடமும் அளித்து கடல் உயிர்க்கோள சமநிலைக்கு வழிவகுக்கின்றன. இதற்கு மேலதிகமாக முருகைக்கற்பாறைகளின் கவர்ச்சியான கட்டமைப்பானது சுற்றுலாப்பயணிகளையும்  ஈர்க்கின்றது. 

இலங்கையில் அண்ணளவாக 32 சதுர கிலோமீட்டர் பவளப் பாறைகள் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றில் 70 சதவீதமான பவளப் பாறைகள் மனிதர்களின் செயற்பாடுகளால் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. முருகை கற்பாறைகளின் அழிவுக்கு பலவாறான இயற்கை மற்றும் மனிதன் சார்ந்த காரணிகள் வழிவகுக்கின்றன.

முருகை கற்பாறைகள் அல்லது பவளப் பாறைகள் அவற்றில் வாழும் உயிரினங்கள் இறப்பதால் முருகை கற்பாறைகள் உயிரற்றதாக ஆகுவது பவள வெளுத்தல் (coral bleaching)  எனப்படும். இவ்வாறான நிகழ்வுகள் உயரும் வெப்ப நிலையால் ஏற்படலாம். IUCN இன் தரவுப்படி கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சர்வதேச ரீதியான பவள வெளுத்தல் (coral bleaching) நிகழ்வில் ஏறத்தாழ 60 சதவீதமான முருகை கற்பாறைகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் அளவு கடந்த மீன் பிடி மற்றும் முறைகேடான மீன் பிடி பழக்க வழக்கங்களும் முருகை கற்பாறைகளை அழிவுக்கு உள்ளாக்கலாம். சில கடற்பிரதேசங்களில் விவசாய கழிவுப் பொருட்கள், கைத்தொழிற்சாலை கழிவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசு என்பவறாறால் சாதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் முருகைகற்பாறைகள் அழிவுக்கு உள்ளாக்கலாம்.

 எவ்வாறெனில் இக் கழிவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான போசணைப்பொருட்களோ இரசாயன பொருட்களோ அல்கா போன்ற வேறு வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு தூண்டுவதால் முருகைக் கற்பாறைகளின் நிலவுகைக்கு தகுந்த சூழல் இழக்கப் படலாம். இத் தகவலானது 2020 ஆம் ஆண்டு என்வயரமெண்டல் பவுண்டேஷன் லிமிடட் (Environmental Foundation Limited) இன்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடற்கரை பிரதேசத்தில் ஒழுங்கு படுத்தப் படாத வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் சிறிய படகுகள், கப்பல்களை நங்கூரம் இடப்படும் போது ஒழுங்குகள் நடைமுறை படுத்தப் படாமை போன்றவை பௌதீக ரீதியில் பவளப் பாறைகளுக்கு சேதத்தை விளைவிக்கலாம். இவ்வாறான பல காரணிகள் பவளப் பாறைகளின் அழிவுக்கு காரணமாக இருந்த போதிலும் நாங்கள் இலங்கை நாட்டு பிரஜைகளாக எங்களால் செய்ய முடியுமான சில கடமைகள் இருக்கின்றன. அவற்றை உணர்ந்து கடைபிடிப்பது எங்களது கட்டாய கடமை ஆகும்.

இது வரையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு வழிமுறைகள் சிலவற்றை பார்க்கலாம். அவற்றில் முதலாவதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கடற் பாதுகாப்பு பிரதேசம் ஆனது அப் பகுதியில் வாழும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வாழிடங்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அக் குறிப்பிட்ட பிரதேசத்தில் அழிவுகளை உள்ளாக்கக் கூடிய செயற்பாடுகள் இடம்பெறுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இவ்வாறான கடல் பாதுகாப்பு பிரதேசங்கள் ஹிக்கடுவ கடல் தேசிய வனம் (Hikkaduwa Marine National Park) மற்றும்  பார் பவளப்பாறை கடல் சரணாலயம் (Bar Reef Marine Sanctuary) ஆலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உள் நாட்டு மக்களுக்கு முருகை கற்பாறைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை உணர்த்தும் விதமாக சமூகம் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் clean ups அதாவது கடற்பிரதேசங்களை சுத்தமாக்கும் பணிகள் அது மட்டுமல்லாமல் நீடித்து நிலைபெறச் கூடிய மீன் பிடி நுட்பங்களை கற்றுக் கொடுப்பதன் மூலமாகவும் இதன் முக்கியத்துவத்தை எம்மால் உணர வைக்க முடியும். இவ்வாறான செயற்பாடுகள் IUCN Sri Lanka, Pearl protectors எனும் அமைப்புகளால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதியதொரு நுட்பமாக பவளப் பாறைகள் மறுசீரமைப்பு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது எவ்வாறானதெனில் பவளப் பாறைகளின் வளர்ப்பை செயற்கையாக ஊக்குவிப்பதாகும். அதாவது சிறியதொரு பவளப் பாறையை அறிமுகப்படுத்தி உயிரினங்கள் வளர்வதற்கு வசதி அளிப்பதன் மூலமாக பவளப் பாறைகளின் எண்ணிக்கையை கூட்டுவதற்கான முயற்சி ஆகும். இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலை மற்றும் பாசிக்குடா போன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை கடற்படையினராலும்  மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரியினராலும்  (National Aquatic Resources Research and Development Agency) நடைமுறை படுத்தப்படுகின்றன.

அத்தோடு நாங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் வளர்ந்து வரும் சமூகத்தினருக்கும் இதன் முக்கியத்துவத்தை உணர வைப்பது கட்டாய கடமை ஆகும். இதனால் எமது நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் முருகை கற்பாறைகளின் முக்கியத்துவத்தை உணர வைத்து அவர்களும் தகாத, முருகை கற்பாறைகளை அழிவுக்கு உள்ளாக்கக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கலாம்.

Leave a Reply